சிவபோக சாரம்
சிவபோக சாரம்
திரு குருஞான சம்பந்தர் அருளியது.
சித்தி தரு நாதன் தென் கமலை வாழ்நாதன்
பக்தி தரு நாதன் பர நாதன் _ முத்திப்
பெருநாதன் ஞானப் பிரகாசன் உண்மை
தருநாதன் நம் குருநாதன்.
அருவும் உருவும் அருவுருவும் அல்லா
ஒருவன் உயிருக்கு உயிராய் ஓங்கித் - திருவார்
கமலை வரு ஞானப்பிர்காசன் என வந்தே
அமல பதம் தந்து எனை ண்டான்.
ஆர் அறிவார் நீதிவழி? ஆர் அறிவார் சித்திமுத்தி
ஆர் அறிவார் நல்தவங்கள் அன்பு அனைத்தும் _ பாரெவர்க்கும்
கத்தன் கமலையில் வாழ் ஞானப்பிரகாசன் எனும்
அத்தன் என் போல் வந்திலன் ஆனால்.
அரி அயற்கு முன்நான் அடிமுடியும் காணாப்
பெரியவனே வந்து பிறந்து _ துரியம்
பெருக்கின்றான் ஞானப்பிரகாசன் ஆகி
இருக்கின்றான் ஆரூரில் இன்று.
கண்டேன் இப்பாசம் கழித்தேன் அமுதை முகந்து
உண்டேன் சுகானந்தத்து உள்ளிருந்தேன் _ வண்டு இமிர்காத்
தேனைப் பொழி கமலைச் செங்கமலப் பொற்பாத
ஞானப்பிரகாசனையே நான்.
உள்ளிருந்தே என்றும் உணர்த்துகினும் கண்டிலர் என்று
உள்ளும் புறமும் ஆவோம் என்று _ மெள்ள
நரர் உருவாய் ஆரூரில் வந்தான் நமை ஆண்டு
அருள் புரி ஞானப்பிரகாசன்.
இருள் உதயம் நீக்கும் இரவியைப் போல் என்னுள்
அருள் உதயம் நன்றாய் அருளி _ மருள் உதயம்
மாற்றியவன் ஆரூரன் மாமறையும் ஆகமும்
சாற்றிய ஞானப்பிரகாசன்.
ஒழியாத பேரின்பத்து உள்ளாய் உலகில்
விழியாது இருந்து விடவே _ அழியாத
பூரணா! செங்கமலப் பொற்பாதா! தென்கமலை
ஆரணா நாயேற்கு அருள்.
தேடும் திரவியமும் சிற்றறிவும் பற்றுதலும்
கூடும் பொய் என்று அருளில் கூட்டினான் _ நாடரிய
ஞானப்பிரகாசன் உயர் நற்கமலை மாநகர் வாழ்
வானப்பிறை அணிந்த மன்.
காண்பதும் பொய் கேட்பதும் பொய் காரியம் போலே இதமாய்ப்
பூண்பதும் பொய் எவ்விடத்தும் போகமும் பொய் _ மாண்பாகத் தோற்றி
இன்பவெள்ளமாய்த் துள்ளி என்னுள் சம்பந்தன்
வீற்றிருப்பது ஒன்றுமே மெய்.
ஒருமையுடன் ஈசன் அருள் ஓங்கி என்றும் தூங்கல்
அருமை அருமை அருமை _ பெருமை இடும்
பாங்காரம் கோபம் அபிமானம் ஆசை வினை
நீங்காதபோது தானே.
தன்பெருமை எண்ணாமை தற்போதமே இறத்தல்
மின்பெருமையாம் சகத்தை வேண்டாமை _ தன்பால்
உடலைத் தினம் பழித்தல் ஓங்கு சிவத்து ஒன்றல்
நடலைப் பிறப்பு ஒழியும் நாள்.
உரை இறந்தால் உண்ணும் உணர்வு இறந்தால் மாயைத்
திரை இறந்தால் காண்கின்ற தேவை _ வரை பெருக
வாசிப்பது நாவால் வாழ்த்துவது நாடகமாய்ப்
பூசிப்பதும் சுத்தப் பொய்.
பரம ரகசியத்தைப் பாழான வாயால்
இரவு பகல் எந்நேரம் இன்றி _ குரல் நெரியக்
கூப்பிட்டும் காணுமோ கோழை மடநெஞ்சே! மால்
பூப்பிட்டும் காணாப்பொருள்.
ஒருகோடி ஆகமங்கள் எல்லாம் உணர்ந்தும்
பெருகு தவம் சித்தி எலாம் பெற்றும் _ குரு அருளால்
வைத்தபடி இருக்க மாட்டாத மாந்தர்க்குச்
சித்த சலனமாம் தினம்.
அன்பு மிக உண்டாய் அதிலே விவேகம் உண்டாய்த்
துன்ப வினையைத் துடைப்பது உண்டாய் _ இன்பம்
தரும் பூரணத்துக்கே தாகம் உண்டாய் ஓடி
வரும் காரணர்க்கு உண்மை வை.
உருவை அருவை ஒளியை வெளியை
இருளைச் சிவம் என்று இராதே _ மருளைப்
பிறிந்து அறிவில் கண்டதனைப் பின்னம் அற எங்கும்
செறிந்த பொருள் தானே சிவம்.
அகம் ஆதி கண்ட அறிவாகி எங்கும்
சுகம் ஆகி இன்ப சுகமாய்ச் _ சுகாதீதத்து
ஆனந்த வெள்ளம் அதுவாய்ச் சுகத்தை அகன்றான்
அந்தம் ஆதி இலாதான்.
இந்தனத்தில் அங்கி எரியுறுநீர் தேன் இரதம்
கந்தம்மலர்ப்போது வான்கால் ஒளிகண் _ சந்ததமும்
அத்துவிதம் ஆவதுபோல் ஆன்மாவும் ஈசனுமாய்
முத்தியிலே நிற்கும் முறை.
ஆறாறு தத்துவமும் ணவமும் நீங்கி உயிர்
வேறாக நின்ற இடம் சொல்லின் _ மாறா
இருள் ஆய பாவனை அற்று எங்குமாய் நின்ற
பொருளே காண் நீயே புணர்.
நனவு ஆதி அந்தத்தில் நாடு சுகம் தன்னைக்
கனவு ஆதி அந்தத்தில் கண்டு _ நனவுதி
தோற்றிடும்போது அந்தச் சுகரூபம் கண்டவர்கள்
மாற்றிடுவர் என்றும் மலம்.
தத்துவங்கள் எண்ணித் தலையடித்துக் கொள்ளாதே
தத்துவங்கள் எது என்னின் சாற்றக்கேள் _ மெத்தும்
சுகாரம்பமாம் சிவத்தில் தோயாத மாயா
விகாரங்கள் தத்துவம் ஆமே.
ஆறுஆறு தத்துவமும் ஆணவமும் வல்வினையும்
நீறுஆக முக்திநிலை நிற்போர்க்குப் _ பேறு ஆகப்
பார்விரித்த நூல் எல்லாம் பார்த்து அறியின் சித்தியிலே
ஓர்விருத்தப் பாதி போதும்.
பாவி மனம் போகாப் பரத்து அடைய நாளும்
இரவு பகல் அற்ற இடத்தே _ திரமாக
நில் என்றான் கண்ட எல்லாம் நேதி பண்ணி மும்மலமும்
கொல் என்றான் ஞான குரு.
காயம் கரணம் முதல் நான்கிற்கும் காரணம்தான்
ஆய இருள் மாயை அது என்றால் _ தூய பொருள்
போதனே!செங்கமலப் பொற்பாதனே எனை நீ
எது என்று சொல்லாய் இனி.
என்னை அறிவு என்றான் என் அறிவில் ஆனந்தம்
தன்னைச்சிவம் என்றான் சந்ததமும் _ என்னை உன்னிப்
பாரா மறைத்ததுவே பாசம் என்றான் இம்மூன்றும்
ஆராய்ந்தவர் மூத்தராம்.
எங்கும் இருக்கும் அறிவுநீ ஏகமாய்
அங்கங்கு உணர்த்தும் அறிவு நாம் _ பொங்கு
மலம் மறைத்தல் மாயை மயக்கல் விகாரப்
பலம் அனைத்தும் கன்ம மலம் பார்.
செங்கமலப் பொற்பாதன் சீர்பாத வல்லவங்கள்
நம் கமலை வாழ்கிளியே! நாடிக்கேள் _ சங்கை இலாத்
தத்துவத்தைக் காட்டியதின் தத்துவத்தைக் காட்டி அருள்
அருள் தத்துவத்தைக் காட்டியது தான்.
தேகசெறி கமலைச் செங்கமலப் பொற்பாதன்
பேசுதமிழ் ஞானப் பிரகாசன் _ பாச வினை
வாட்டினான் மீட்டுநான் வாராவகை அருளைக்
காட்டினான் கூட்டினான் காண்.
நான் இங்காய் நீஅங்காய் நாட்டமற வைத்ததன் பின்
நான் எங்கே? நீஎங்கே? நாதனே! - வான் எங்கும்
ஒன்றாகி நின்ற உணர்வுநீ உன் அறிவில்
நன்றாகத் தோன்றுசுகம் நாம்.
அலைவு அற்று இருந்த அறிவுநீ ஆங்கே
நிலை பெற்று இருந்த சுகஞேயம் _ மலைவு அற்று
இருந்தது கண்டாயே இருந்தபடி அத்தோடு
இருந்துவிடு எப்போதும் இனி.
அகத்தை இழந்து அருளாய் அவ்விடத்தே தோன்றும்
சுகத்தில் அழுந்திவிடச் சொன்னான் _ மகத்தான
சிற்பரன் ஆரூர்தனில் வாழ் செங்கமலப் பொற்பாத
தற்பர ஞானப்பிரகாசன்.
கிட்டாத ஈசன் உனைக்கிட்டி அருள்புரிந்த
நிட்டானுபூதி நிலையிலே - முட்டாது
இருவன்னி சேர்ந்து மாற்று ஏறிய பொன் போலே
வரும் இன்ப பூரணம் ஆவை.
அநாதி சுகரூபி அரன் அடிக்கீழ் என்றும்
அநாதி சுகரூபி ஆன்மா - அநாதி
இருந்த மலம் போக்கி இறை அருளினாலே
இருந்தபடியே கண்டு இரு.
இற்றைவரைக் காரணத்தோடு இணங்கினையே
இற்றைவரைச் சென்மம் எடுத்தனையே _ இற்றைவரைத்
துன்ப வெள்ளத்து உள்ளே துளைந்தனையே ஈதுஅற நல்
இன்ப வெள்ளத்து உள்ளே இரு.
தேகாதி நான் அல்ல என்று அறிந்தால் சித்தமயல்
போகாதது என்னையோ? புண்ணியா _ தேகாதி
தன் அளவே அம்மயக்கம் சத்தியமாய் எப்பொழுதும்
உன் அளவே இல்லை உணர்.
ஆறு ஆறு தத்துவம் அன்று என்று அறிந்தனையே
ஆறும் ஆறும் கண்டு அறிவன் ஆயினையே _ மாறாமல்
உன் அறிவில் ஆனந்தத்து ஓங்கினையே ஓராமல்
நின்னறிவை விட்டு அதுவாய் நில்.
மாதா பிதாச் சுற்றம் என்று மயங்கினையே
நீதான் தனுவாகி நின்றனையே _ ஈது எல்லாம்
பொய் என்று அறிந்தனையே பூரண ஆனந்த வெள்ளம்
மெய் என்று அறிந்தனையே மெய்.
மனையில் வரு போகத்தின் மாதர் மக்கள் பாச
வினையில் அழுந்தி விடாதே - உனை இழந்து
காணாமல் கண்டானைக் காட்சியறக் கலந்து
பூணாமல் எப்பொழுதும் பூண்.
கத்தவத்தை நாடீடும் சுத்த இராப்பகலா
மெத்தவத்தை நாடி விடுவையேல் _ கத்தவத்தை
தானாய் இரண்டும் தவிர்த்த சிவானந்த
வான் ஆவை நீயே மதி.
கத்தநிலம் உந்தனுக்கு சொல்லக்கேள் தொல்லைவினைத்
தத்துவங்கள் ஆறுஆறும் தாம் பெருகக் _ கத்திடுவர்
எல்லாம் இழந்த இடமே அதுவாக
நில்லாய் அதுவே நிலை.
நெருப்பு என்றால் வாய்கடுமோ?நெய்பால் கட்டித்தேன்
கருப்பு என்றால் தித்தியா காண்நீ _ விருப்பமுடன்
நீபிரமம் என்றக்கால் நீபிரமம் ஆயினையோ
நீபிரமம் சற்குரு வானில்.
ஆர்க்கும் தெரியாத ஆனந்த இன்ப வெள்ளம்
மேற்கொண்டு விடுகின்றது இல்லை _ யார்க்கும்
தெரியாப் பரப்பிரமம் சேர்த்தாய் உனக்குச்
சரியார் ? சிதம்பர நாதா !
உள்ளம் கரைய உடல் கரைய ஆனந்த
வெள்ளம் கரை புரண்டு மேலாக _ கள்ளமலம்
பொய் ஆக என்னுள் புகுந்தவாறு என்கொலோ ?
ஐயா! தியாக வினோதா !
ஏதேது செய்தாலும் ஏதேது சொன்னாலும்
ஏதேது சிந்தித்து இருந்தாலும் _ மாதேவா !
நின் செயலே என்று நினது அருளாலே உணரின்
என் செயலே காண்கிலனே.
மாயை மலம் எங்கே மறைந்ததோ !மாயைதனில்
ஆயசகம் எங்கே அழிந்ததோ ! காயமதில்
தங்கும் புருடன் எங்கோ ! சச்சிதானந்த வெள்ளம்
எங்கும் மிகக்கோத்ததே.
நானும் சுகவடிவாய் நண்ணினேன் நின் அருளால்
வானும் சுகவடிவாய் மன்னிற்றே _ வானும்
சுகரூபமன்று மணம் தோற்ற நிலம்போல் உன்
அகரூப மட்டே அது.
ஈசன் அடியில் இருக்கையிலே எங்கெங்கும்
ஈசன் அடிதேடி இளைத்தேனே_ பேசரிய
பொற்பதந்தன் செங்கமலப் பொற்பாதன் தன்னுடைய
நற்பதத்தைக் காணாமுன் நான்.
நற்பதம் சேர் ஆரூரின் ஞானப்பிரகாசன் எந்தை
தற்பரன் ஓர் ஞானவான் தந்தானே _ சொற்பனத்தும்
காரார் மறலி அயன் கண்ணனுக்கும் அஞ்சேனை
யாராலும் என் செய்யலாம் ?
வெறும் பாழில் பேரின்ப வெட்டவெளி தன்னில்
குறும்பானார் காணாக்குடிலின் _ உறும்பாசம்
ஒட்டி எனை வைத்தனனே உற்ற பிரபஞ்சம் எலாம்
ஆட்டிய ஞானப்பிரகாசன்.
என்றும் சிவத்தோடு இணைபிரியாதே அறிவாய்
நின்றபடி தன்னை நிகழ்த்தினான் _ மன்றில்
நடம் ஆடும் ஆரூரன் ஞானப்பிரகாசன்
திடமாக என் உள்ளத்தில்.
நாதனார் தென்கமலை நாயனார் எவ்வுயிர்க்கும்
போதனார் செங்கமலப் பொற்பாதர் _ பேதம் அற
ஒன்று இரண்டு தானறவே உண்மையிலே கூட்டி எனை
இன்றறவே வைத்து விட்டாரே.
நன்னெஞ்சே நீ கேட்ட நமை எலாம் சொல்லுதற்குக்
கல்நெஞ்ச மால் அயனும் காணாதோன் _ வன்னெஞ்சர்
இன்னகுறை உண்டு எண்ணா ஈசன் எதிர் வந்தான்
என்ன குறை? சொல்லாய் இனி.
இட்டசனம் எங்கே இதம் அகிதம் தான் எங்கே
துட்டசனம் எங்கே ? தொழில் எங்கே ? - சிட்டருடன்
கூடி இருந்தது எங்கே ? குன்றாச் சிவானந்தம்
நாடி அதுவாய் இருந்த நாள்.
வாக்கு மனம் காயத்தால் வந்த பொருள் அத்தனையும்
வாக்கு மனம் காயமுடன் மாயுமே _ வாக்கு மனம்
காயம் உடன் இழந்து காண் ஞாதிரு ஞான
ஞேயம் இழந்த நிலை.
புசிப்போம் சிவபோகம் பூரணமாய் எங்கும்
வசிப்போம் உலகில் வசியோம் _ முசிப்பின்றி
வாழ்வோம் சிவத்தை உணர் மாதவர்தம் பொன்னடிக்கீழ்த்
தாழ்வோம் எமக்கு ஆர்சரி ?
அறிவுநீ என்ன அறிந்து மாயைச்
செறிவுநான் என்றென்று சேர்ந்தால் _ அறிவு
தெரிந்திடுமோ? இன்பசுகம் சேர்ந்திடுமோ? நின்னைப்
பிரிந்திடுமோ? சென்மப்பிணி.
அரணங்கள் தாம் எரித்த அத்தரே என்னுள்
கரணங்கள் ஒட்டும் வகை காட்டீர் _ கரணங்கள்
நீ அதுவாய் நில்லாமல் நின் அறிவைக் கண்டருளில்
போயதுவாய் நின்றுவிடப்போம்.
தான் அல்லாது அத்தனையும் தான் என்று உழலாமல்
தான் எல்லாமாயதனுள் தாக்காமல் _ தான் எல்லாம்
ஆனோம் எனும் போதத் தாக்காமல் ஈசன் இடத்து
ஆனோனே ஆயினவாம்.
தேகம் நாம் என்று என்று செப்புவீர் ஈதில்வரும்
போகம் நாம் என்று புலம்புவீர் _ நோக
வருந்துவீர் தீவினையின் மாறாத இன்பம்
பொருந்துவீர் எப்படி நீர் போய்?
தன்னை இழந்திடத்தே தானே சுக வடிவாய்
இன்னபடி என்று அரியா எங்கோனுள் _ பின்னமற
நின்ற நிலை தானும் தெரியாதே நின்றவர்கட்கு
அன்றோ பிறப்பு அறுக்கலாம்.
உன்னாதே பற்று உரையாதே ஒன்றியதில்
நின் நாமம் இல்லை நிகழாதே _ பன்னாள்
பரை இழந்து நிற்கும் பயன் அணைந்தார் நெஞ்சில்
திரை இழந்து நிற்கும் சிவம்.
அருள் அறிந்து தானாம் அறிவு அறிந்தே ஆங்கு உள்
பொருள் அறிந்து தான் அடங்கிப் போத _ இருள் அகல
விம்மாது இருந்து விகற்பமற ஒன்றாகிச்
சும்மா இருக்கை சுகம்.
செறியும் தனுஆதி சேர்ந்துஅறிந்து நின்ற
அறிவை அறிவால் அறிந்தே _ அறிவிழந்து
நின்றால் சுகானந்த நீடு நிலை வேறு
சென்றால் சுகம் கிடையாதே.
தத்துவத்தை விட்டு அருளில்தான் கலந்து தன் இழப்பில்
மெத்தும் சுகத்தில் மிக அழுந்திச் _ சுத்தமாய்
ஒன்றாகி நின்ற உணர்வும் ஒழிந்தக்கால்
அன்றோ சிவ போகமாம்.
கட்டறிவு கெட்ட சுகாதீத உண்மையிலே
விட்டு அகலாது என்றும் விரவுவோர் _ இட்டமுடன்
யோக சமாதிகளும் உட்புறம்பாம் பூசைகளும்
ஆக நினையார் அவர்.
நின் அறிவில் யான் ஒளித்து நீஆகி நின்றது போல்
என் அறிவில் நீஒளித்தே யான் ஆகி _ எந்நாளும்
நிற்க வல்லமையாகில் நின் சனனம் போக்குதற்குக்
கற்கவல்லது ஏதும் இல்லை காண்.
இன்ப சுகத்துள்ளே இருக்கலாம் எப்போதும்
துன்பவினை உன்னைத் தொடராது _ வன்பா
மருள் தேகமாய் அடங்கி மாயாமல் நெஞ்சே
அருள் தேகமாய் அடங்குவாய்.
தேகம் மறந்து திருவருளாய் நின்று சிவ
போகம் விளையப் புணர் நெஞ்சே _ நோக
வருந்தாமல் தீவினையில் வாடாமல் துன்பம்
அருந்தாமல் நீ பிறவாமல்.
பூதாதி பாசம் அன்றோ பூரணா னந்தமன்றோ
பேதமற நம்முள் பிரான் அன்றோ _ வாதனைகள்
விட்டால் சுகமன்றோ என்று உணர்வில் வேண்டுவதும்
கெட்டால் பிறப்பு கெடும்.
அழுந்தாதே பாசத்து அனுதினமும் ஐயோ
விழுந்தால் எழுந்திருக்க வேண்டும் _ செழும்பாகை
மீறித் தரும் இரத வீட்டுஇன்ப மாமலை மேல்
ஏறித் திரும்பலாமே.
என்றும் சனனத்து இடர்க்கடலிலே மூழ்கிப்
பொன்று மனமே!உனக்கு ஓர் புத்தி கேள் _ நன்று
கனிச்சங்கம் சேராமல் தற்பரனைச் சேரில்
இனிச்சங்கம் சேராதிரு.
அவரவர்க்கு உள்ளபடி ஈசன் அருளாலே
அவரவரைக் கொண்டு இயற்றுமானால்_ அவரவரை
நல்லார் பொல்லார் என்று நாடுவது என் நெஞ்சமே
எல்லாம் சிவன் செயல் என்று எண்.
எங்கே நடத்துமோ? எங்கே கிடத்துமோ?
எங்கே இருத்துமோ என்றறியேன் - கங்கைமதி
சூடினான் தில்லையிலே தொம் தொம்மெனநின்று நடம்
ஆடினான் எங்கோன் அருள்.
போகம் புவனம் பொருந்தும் இடம் எங்கெங்கும்
தேகம் கரணம் திரியுமே _ யாகில் அது
தன்னை நீஎன்று தவியாதே நெஞ்சமே
நின்னையே கண்டு அருளில் நில்.
ஏதேது செய்திடினும் ஏதேது பேசிடினும்
ஏதேது சிந்தித்து இருந்திடினும் _ மாதேவன்
காட்டிடுவதான அருள் கண்ணைவிட்டு நீங்காது
நாட்டம் அதுவாய் நட.
எடுத்த உடற்கு ஏய்ந்த கன்மம் எப்போதும் ஊட்டும்
விடுத்துவிட்டோம் என்பர் விழலர் _ விடுத்தது
அதுவன்றே ஐந்து மலம் ஆறும் ஆறும் நீத்த
இதுவன்றோ யாம் துறவு என்போம்.
எவ்வுயிரும் காக்க ஓர் ஈசன் உண்டோ இல்லையோ
அவ்வுயிரில் நாம் ஒருவர் அல்லவோ _வவ்விப்
பொருகுவது நெஞ்சே புழுங்குவதும் வேண்டா
வருகுவதும் தானே வரும்.
முப்பதும் சென்றால் விடியும் முப்பதும் சென்றால் இருளும்
அப்படியே ஏதும் அறிநெஞ்சே _ எப்பொழுதும்
ஆம்காலம் எவ்வினையும் ஆகும் அது தொலைந்து
போம்காலம் எவ்வினையும் போம்.
ஆவ லுற்றிடும் சகலத்து ஆவதும் ஆங்கவரே
கேவலத்தில் மூழ்கிக் கிடப்பதுவும் _ நா அரற்றல்
இல்லாத கத்தத்து இருப்பதுவும் இம்மூன்றும்
இல்லான் செயல் என்று இரு.
பாசம் சடம் உயிரோ தானாகப் பற்றறியாது
ஈசன் இரண்டும் இணைத்து ஆட்டிப் _ பூசல் என்றும்
செய்பவனே தானே திரும்பி அருள் செய்யாமல்
உய்பவர்கள் உண்டோ உரை.
முற்றின்பாம் அறிவில் மூழ்குவதும் மோகம் மிகு
சிற்றின்பமாம் அருளில் சேர்குவதும் - உற்று இங்கு
அறிந்தால் என் நெஞ்சே!அகிலாண்டம் எங்கும்
செறிந்தான் செயலே தெளி.
என்னிடத்தில் நின் செயலே இல்லையென்றால் யாது உறினும்
நின்னிடத்தில் யான் வேண்டல் நிச்சயமே _ என்னிடத்தில்
இன்மை உயிர்க்கு உயிர்நீ இன்மை இருந்து இயற்றின்
நன்மை தீமைக்கு எதுவோ நான்.
நாம் பெரியம் என்னும் அதை நாடாது அடக்குமவர்
தாம் பெரியர் என்று மறை சாற்றியிடும் _ நாம் பெரியர்
என்பார் சிறியர் இவரலாது இவ்வுலகில்
துன்பு ஆர் சுமப்பார்கள் சொல்.
கட்டமாம் காயம் கலை அனைத்தும் கற்றாலும்
அட்டமாசித்தி அடைந்தாலும் _ இட்டம்
பரம சுகமே பதியாத போது
திரம சுகமே தெளி.
மனம் வாக்குக் காயம் உயிர் மன்னி அசைப்பானும்
அனம் ஆதிபோகம் அளிப்பானும் _ நனவு ஆதி
கூட்டி விடுவானும் முக்தி கூட்டிடுவானும் பிறப்பில்
ஆட்டிவிடுவானும் அரன்.
முன்னை வினைக்கு ஈடா முதல்வன் அருள் நமைக்கொண்டு
என்ன வினை செய்ய செய்ய இயற்றுமோ _ இன்னவினை
செய்வோம் தவிர்வோம் திரிவோம் இருப்போம் இங்கு
உய்வோம் எனும் வகை ஏது.
ஊட்டும் வினை இருந்தால் உன்ஆணை உன்பதத்தைப்
பூட்டிப் பிடித்துப் புசிப்பிக்கும் _கேட்டுத்
திரியாதே வந்து தில்லைத் தெய்வமே என்றென்று
எரியாத நெஞ்சே இரு.
என்னது அன்று நின் செயலே என்று அறிந்தால் யான் விரும்பி
என்ன என்று வாய் திறப்பேன் ஈசனே _ இன்னமின்னம்
எப்படியோ நாயேனை ஈடேற்ற வேண்டும் உனக்கு
அப்படியே செய்து அருளுவாய். 89
வன்மைபுரி காய மரப்பாவை தன்னை அரன்
கன்மமெனும் சூத்திரத்தால் கட்டியே _ நன்மைதின்மை
ஆட்டுவது நாடாது அறிவிலார் தம்செயலாய்
நாட்டுதல் போல் உண்டோ நகை.
ஆறுஆறு தத்துவமும் ஆணவமும் நீங்கி உயிர்
பேறாக ஆனந்தம் பெற்றாலும் _ வேறாகப்
பார்த்திருப்பது அன்றியே பாழான கன்மத்தை
நீத்திருக்கலாமோ நிலத்து.
ஆன சுக துக்கத்து அழுந்துகினும் ஞானிகள் தாம்
யான் எனது எண்ணி இயைந்திடினும் _ தான் அதற்கு
வேறு என்றுஅருளால் விரளமாய்க் காணில் என்றும்
ஏறுமோ கன்மம் இலை.
சத்துருவும் மித்துருவும் தாரணியில் வேறு இல்லை
சத்துருவும் மித்துருவும் தன் நெஞ்சே _ பெத்தமலம்
வீட்டும்படிக்கு வினைக்கு ஈடு உனைத்தனுவோடு
ஆட்டும் சிவன் என்று அறி.
இன்னவினை இன்னதலத்து இன்னபொழுது இன்னபடி
இன்னதனால் எய்தும் என அறிந்தே _ அன்ன வினை
அன்னதலத்து அன்னபொழுது அன்னபடி அன்னதனால்
பின்னமறக் கூட்டும் பிரான்.
அன்றே அநாதி அமைத்தபடி அல்லாது ஒன்று
இன்றே புதிதாய் இயையுமோ _ என்றும்
சலியாது இயற்றுவான் தன்னையே நோக்கி
மெலியாது இருந்து விடு.
ஆர்பெரியர் ஆர்சிறியர் ஆர்உறவர் ஆர்பகைஞர்
சீர் பெரியர் ஆனந்த சிற்சொரூபர் _ பேர் பெரியர்
எங்கெங்கும் தாமாய் இருந்து சடசித்து அனைத்தும்
அங்கு அங்கு இயற்றுவதனால்.
நன் கருத்தே தென்கமலை ஞானப்பிரகாசனே
என் கருத்தே உன் கருத்து என்று எண்ணாமல் _ உன்கருத்தே
என்கருத்து என்று எண்ணியே யான் பட்ட துன்பம் எலாம்
உன்கருத்தே தீர அறியும்.
அமைத்த வினைக்கு ஈடா அநுதினமும் செய்வது
இமைப் பொழுதும் வீண் செயல் ஒன்று இல்லை_ உமைக்கு உரியான்
எல்லாம் அறிந்து எங்கு இயற்றுவதும் தன் அடிமை
வல்லர் தமக்கு உணர்த்துவான்.
கள்ள அரனே கருணையுடன் என் அறிவில்
உள்ள சுகம் தந்துவிட ஒன்னாதோ _ மெள்ள
வருத்துவதும் தீவினையில் வாட்டுவதும் ஞானம்
பொருத்துவதும் ஏன் தான் புகல்.
கேளாது எனை மலத்தில் கிட்டி எடுத்து ஆளாக்கி
மீளாது அளித்த பரவீட்டில் எனை _ ஆள
உனக்குப் பொறியோ உனைத் தொடர்ந்தாளென்ன
எனக்குப் பொறியோ இனி.
சும்மா தனு வருமோ சும்மா பிணிவருமோ
சும்மா வருமோ சுகதுக்கம் _ நம்மால் முன்
செய்த வினைக்கு ஈடாச் சிவனருள் செய்விப்பது என்றால்
எய்தவனை நாடி இரு.
பொல்லாத தீவினையில் போகார்கள் போனாலும்
எல்லாம் சிவன் செயலே என்று இருப்பர்_ நல்லார்கள்
நற்றும் கமலையில் வாழ் ஞானப்பிரகாசன் அருள்
சற்றும் பிரியாதவர்.
கூட்டுவதும் கூட்டிப் பிரிப்பதுவும் ஒன்றொன்றை
ஆட்டுவதும் ஆட்டி அடக்குவதும் _ காட்டுவதும்
காட்டி மறைப்பதுவும் கண்ணுதலோன் முன் அமைத்த
ஏட்டின்படி என்று இரு.
உள்ளதுதான் போமோ மற்று இல்லாதது வருமோ
பள்ளமே வெள்ளம் பரவாதோ _ கள்ளமாய்ப்
பித்துப்போலே பிதற்றும் பேதை மட நெஞ்சமே
செத்துப் போனானோ சிவன்.
ஈசன் பலகீனன் என்றக்கால் ஆலயத்தின்
மோசம் வந்ததென்று மொழியலாம் _ ஈசனே
ஆக்குவதும் ஆக்கி அழிப்பதுவும் தான் ஆனால்
நோக்குவது என்? யாம் பிறரை நொந்து.
தேசம் சிவாலயங்கள் சேரவலைய ஒரு
மோசம் வந்தது. ஐயோ முதல்வனே! _ தேசத்து
மண்ணை வெறுப்பேனோ வருவினையை ஊட்டுவிக்கும்
உன்னை வெறுப்பேனோ உரை.
துரத்தி உன்னை ஆசை தொடராமல் என்றும்
விரக்தியினால் ஆங்கவற்றை விட்டுப் _ பரத்தில் அன்பு
செய்யடா செய்யடா சேரப் பிரபஞ்சமெல்லாம்
பொய்யடா பொய்யடா பொய்.
அனைத்து உலகும் நம்மால் அநுக்கிரகம் பெற்று என் ?
அனைத்துலகும் நம் வசமாய் ஆய் என்? _ அனைத்து உலகும்
கொண்டாடில் என்னை? வினைக்கொத்து அறுத்துப் பேரின்பம்
கண்டாடில் அன்றோ கதி.
அறிவு இழந்து நின்ற சுக ஆனந்தத்து உள்ளே
குறி இழந்து நின்று குலாவிப் _ பிறியாது
இருந்தால் பிறப்பு அறுமோ?விச்சைமால் கொண்டு
திரிந்தால் பிறப்பு அறுமோ? செப்பு.
எத்திசையும் எவ்வுலகும் எத்தொழிலும் எப்பயனும்
நித்தியம் என்று எண்ணின் நிலையாதே _ புத்தியினால்
கண்ணாடியில் தோன்றி மாய்ந்து விடும் காண் இவற்றைக்
கண்ணாடியில் கனவில் காண்.
எத்தனைதான் கற்றாலும் எத்தனைதான் கேட்டாலும்
எத்தனை சாதித்தாலும் இன்புறா _ சித்தமே
மெய்யாகத் தோன்றி விடும் உலக வாழ்வு அனைத்தும்
பொய்யாகத் தோன்றாத போது.
மின் போலத்தோன்றிடும் உலக வாழ்வு அனைத்தும்
என்போலிகள் திரமென்று எண்ணுவர்_தன்போதம்
இல்லார் சிவபோகம் என்றும் அருந்தியிடு
நல்லார் திரம் இது என்னார்.
தேசம் ஊர்பேர்காணி சீர்வரிசை சாதியெனும்
ஆசையால் நெஞ்சே! அலையாதே _ நேசப்
பொருப்பானை நின்று அறிவில் போக்கு வரவுஅற்று
இருப்பானைப் பார்த்தே இரு.
ஆகம் பகை ஆவது அன்றிப் பகை உண்டோ?
மோகம் தவிர்த்த முனிவோர்க்கு இங்கு _ ஏகன்
இருவர் அறியாத ஈசன் அருள் அல்லால்
ஒருவர் துணை உண்டோ ? உரை.
அளவிலாச் செல்வத்து அடைந்தாலும் ஆகத்து
அளவிலாச் சித்திகள் உண்டாயும் _ அளவில் கலை
ஆய்ந்தாலும் என்னை? சுகர் அல்லர் சிவானந்தம்
தோய்ந்தார்கள் அன்றோ சுகர்.
ஆகாத காரியம் செய்து ஆம்சுகமும் ஆங்கதனால்
போகாத துக்கம் பொருந்துவதும் _ ஓகோ
உரைக்கில் அணுவுக்கும் உயர்ந்த மாமேரு
வரைக்கும் நிகராம் மதி.
பொஊஇல் வரும் துன்பம் புகுந்து அறிந்தும் பூரணமா
மெய்யில் வரும் இன்ப விளைவு அறிந்தும் _ ஐயோ
தெளியாதது என்ன? நலம்தீங்கு கண்டு சற்றும்
களியாதது என்ன மயக்கம்.
ஆகம் சிறைச்சாலை அக்கரணம் காவலாள்
போகம் புவனம் பொருந்தும் இடம் _ ஒகோ
இதனுள் படும் உயிர்கட்கு ஈடேற்றம் செய்வான்
அதனுக்கு இறைவன் அரன்.
அதிட்டானம் ஈசன் அருள் அன்றி மற்றை
அதிட்டானம் எல்லாம் அநித்தம் _ அதிட்டானம்
பொய் என்று அறியாமல் பூதலத்து நெஞ்சமே!
மெய் என்று உழல்வது எல்லாம் வீண்.
நின்னை மதிக்கின் நினக்கு அதிகர் செல்வம் நினை
நின்னை அறிஞன் என நீ நினையின் _ நின்னில்
சிறியார் வறுமை நினை சிந்தை புக என்றும்
குறியா இடும்பை துக்கம் கோள்.
அநித்தியத்தை நித்தியம் என்று ஆதரிக்கும் பொல்லா
மனித்தருடன் கூடி மருவார் _ தனித்திருந்து
மோனந்தமாம் சிவத்தில் மூழ்கி மலத்தை அறுத்து
ஆனந்தமாய் அழுந்துவார்.
தாகம் மறந்து சதுர் மறந்து தான் மறந்து
தேகம் மறந்து அட்டமா சித்தி மறந்து _ ஆகத்தின்
வந்தது அறியாது இருந்து மாறாச் சிவானந்தம்
சந்ததம் வாழ்வார்க்கு ஆர்சரி.
உள்ள மலம் நீங்கி ஒழியாச் சிவானந்த
வெள்ளம் துளைந்து விளையாடும் _ பிள்ளைகாள்
அத்துவிதம் ஆனீர் நம்மாகம் பிரிந்தோம் என்று
இத்துவிதம் எண்ணுவானேன்.
அறிவாய் அறிவு இழப்பில் ஆகின்ற இன்பச்
செறிவாய் சுகமாய்த் தினமும் _ பிறியாது
இருந்து அங்கு அதீதமாய் ஏய்ந்த சிவானந்தம்
பொருந்துவார் முத்தரெல்லாம் போய்.
தனை அறியார் ஈசன்தனை அறியார் பாச
வினை அறியார் ஆனந்தம் மேவார் _ தனை அறியும்
சிட்டர் தமக்கு இல்லாத தீங்கு உரைப்பர் பொல்லாத
துட்டர் தமக்கு உள்ள தொழில்.
தன்னை அறியார் தலைவன் தனை அறியார்
முன்னை வினையின் முடிவு அறியார் _ பின்னைக்
குருக்கள் என்றும் பேரிட்டுக் கொள்ளுவார்கள் ஐயோ
தெருக்கள் தனிலே சிலர்.
வாயுவெளிதான் அசையாதவாறு இருந்தால் போல் என்று
நீயதுவும் பூரணமாய் நிற்கவே_ காயத்துக்கு
உள்ளுக்குள்லேதான் சிவம் என்று உற்றுப்பார்ப்பார் ஊசிப்
பொள்ளலால் வான் பார்ப்பார் போல்.
கற்க இடர்பட்டு மிகக் கற்றஎல்லாம் கற்றவர்பால்
தற்கம் இட்டு நாய் போலச் சள்ளெனவே _ நற்கருணை
வெள்ளம் அடங்கும் விரிசடையார்க்கு ஆளாகி
உள்ளம் அடங்க அல்லவோ.
அறியார் கனவிலும் ஆனந்த ரூபம்
அறிவார் தமையும் அடையார் _அறிவார்கட்கு
இல்லாத தீங்கே எடுத்து உரைப்பார் இவ்வுலகில்
பொல்லார் தலையில் பொறி.
நீதி இல்லா மன்னர் இராச்சியமும் நெற்றியிலே
பூதி இலார் செய்தவமும் பூரணமாம் _ சோதி
கழல் அறியா ஆசானும் கற்பு இலரும் சுத்த
விழல் எனவே நீத்துவிடு.
ஐந்தறிவால் கண்டாலும் ஆர் ஏது சொன்னாலும்
எந்த விருப்பு வெறுப்பு ஏய்ந்தாலும் _ சிந்தையே!
பார விசாரத்தைப் பண்ணாதே ஏதொன்றும்
தீர விசாரித்துச் செய்.
பரபரக்க வேண்டா பலகாலும் சொன்னேன்
வரக்கண்டு ஆராய் மனமே _ ஒருவருக்கும்
தீங்கு நினையாதே செய்நன்றி குன்றாதே
ஏங்கி இளையாது இரு.
மிகுந்த குலம் செல்வத்து மேவுவதும் அத்தைப்
பகுத்துப் பொய் என்று விடும் பாங்கும் _ தொகுத்து
விரித்தால் நன்னெஞ்சே! மிகு வாரணத்தை
உரித்தான் செயல் என்று உணர்.
ஆறு ஆறு தத்துவம் வைத்து அத்தில் உறை மூர்த்திகள் வைத்து
ஏறா மலபாகம் ஏறவே _ மாறாமல்
உன்னை விடாது ஆள்வான் உனைக்கேட்டோ நெஞ்சமே
என்ன விசாரம் எமக்கு.
தானோ அசத்து அல்ல என்று அறிந்தால் தாரணியில்
ஏனோ பிதற்றிடுவது ஏழை நெஞ்சே _ தானே
தானே இறவாது தான் இறக்க அருளை
மறவாது இரு சிவம் ஆவை.
ஏற்றாது அவையாய் இருப்பதுவும் உள்மயக்கம்
ஆற்றாது தீர் என்று அறற்றுவதும் _ தோற்றாது
தோற்றுவதும் உன்னைச் சுக பூரணன் என்று
தேற்றுவதும் ஈசன் செயல்.
அன்றே அரன் அணுக்கள் பாசங்கள் ஐந்தொழில்கள்
நன்றே சிவனும் நடுவனே _ சென்று அருளில்
நிற்கச் சிலர் சிலர்கள் நீள் நரகில் பூதலத்தில்
சொற்கத்து இருப்பது என்னோ சொல்.
ஆசை அறாய் பாசம் விடாய் ஆனசிவ பூசை பண்ணாய்
நேசமுடன் ஐந்தெழுத்தை நீ நினையாய் _ சீ சீ
சினமே தவிராய் திருமுறைகள் ஓதாய்
மனமே உனக்கு என்ன வாய் ?
தில்லைவனம் காசி திருவாரூர் மாயூரம்
முல்லைவனம் கூடல் முதுகுன்றம் _ நெல்லை களர்
காஞ்சி கழுக்குன்றம் மறைக்காடு அருணை காளத்தி
வாஞ்சியமென் முத்தி வரும்.
சிவபோக சாரம் முற்றிற்று _ சிவ சிவ.
எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழாசான்
திரு. அ.பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு காணிக்கையாக
புதுவை ஞானம் தொகுத்தது.
Sunday, July 19, 2009
[+/-] |
SIVA POOKA SAARAM |
Subscribe to:
Posts (Atom)